அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!
முஸ்லிமாக கலிமா ஓதிய எந்த ஒரு மனிதரையும் இழிவுபடுத்துவது எனக்குள்ள பணியல்ல மாறாக உண்மையை நன்மையை விளக்கிக் கூறவே அல்லாஹ் எனக்கும் அறிவை கொடுத்துள்ளான்.
சுன்னத்வல் ஜமாஅத், தப்லிக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்று பல்வேறு வகைகளாக உள்ளீர்கள் உங்களை தரக்குறைவாக விமர்சிப்பதோ, உங்கள் செயல்களை இழிவுபடுத்துவதோ எமது பணியல்ல அது முறையுமல்ல
மாறாக நீங்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்களும் காட்டித்தராத அல்லாஹ் வெறுக்கின்ற செயல்களில் முன்னோர்கள் மற்றும் மூதாதையர்கள் பின்பற்றி காட்டித்தந்த வழிமுறையைத்தான் நீங்கள் மார்க்கம் என்று கருதுகிறீர்கள். அதை தவறு என்ற ஆதாரங்களோடு விளக்கிக் கூறவே இந்த கட்டுரையாகும்.
ஷபே பராஅத் வரலாறு
ஷபே என்றால் இரவு
பராஅத் என்றால் பிரகாசம்
பராஅத் என்ற பாரசீக சொல்லுக்கு பிரகாசம் என்று பொருள்.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளிலிருந்து இந்த ஷபே பராஅத் எனும் பித்அத் (மார்க்கத்தில் நபிகளார் கற்றுத்தராத புதிய வழிமுறை) உருவானது. ஷியா பிரிவைச் சார்ந்த முஸ்லிம்களால் ஈரானிலிருந்து தோன்றிய புதுமை வழிகேடாகும்.
பாரசீக வளைகுடாவில் வசித்து வந்த Khorasan கோராசான் என்ற பகுதியில் வசித்து வந்த மக்கள் வணிகம் சம்பந்தமாக அடிக்கடி அன்று பாகிஸ்தான், பங்களாதேஸ், பா்மா ஆகியன ஒன்றிணைந்த இந்தியாவிற்கும் சீன தேசத்திற்கு பயணம் மேற்கொள்வது வழக்கம்.
அக்கால கட்டத்தில் சீன தேசத்து மக்களிடம் BON FESTIVAL காணப்பட்டது இந்த பண்டிகைகளின் மூலமாக சீனர்கள் இறந்த தங்கள் முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்றி மகிழ்வா். அதே போன்றதொரு பண்டிகை நமது இந்தியாவில் (பிராமணர்கள்) பார்ப்பணர்களால் ஆண்டுத் திதி எனப்படும் பித்ரு பர்க்சா பண்டிகையினை இறந்தோரை நினைவு கூறும் வகையில் தீபம் ஏற்றி கொண்டாடி வந்தனர்.
தங்கள் இறந்த முன்னோர்களை சீனர்களும் இந்தியர்களும் நினைவு கூர்ந்து கொண்டாடுவதை விரும்பிய கேராசான் ஷியா பிரிவைச் சார்ந்த அறிவிழிகள் BON FESTIVAL மற்றும் பித்ரு பர்க்சா பண்டிகைகளைப் போன்றதொரு பண்டிகையை தங்கள் பகுதியில் அறிமுகம் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து பிரார்த்திக்க முடிவு செய்தனர்.
ஈரானிய கோராசான் மக்களால் இஸ்லாத்தில் இல்லாத புதிய வழிகேட்டை இறந்தோரை நினைவு கூறும் பண்டிகையாக ஷபே பராஅத் என்று பெயரிட்டு அந்த நாளில் தங்கள் இறந்த முன்னோர்கள் பாவ மீட்சி பெற்று சுவர்க்கம் செல்வதாகவும் தங்கள் இல்லங்களுக்கு ஆவிகளாக வந்து ஆசிர்வதிப்பதாகவும் அவர்களுக்காக அவர்கள் வாழும் போது உண்டு மகிழ்ந்த உணவுகளை படையலாக வைத்து ஃபாத்திஹா ஓத ஆரம்பித்துவிட்டனர்.
ஆதாரம் இதோ கோராசான் பகுதியில் தோன்றியது ஷபே பராஅத்
கிபி 973 – முதல் 1050 காலத்தில் வாழ்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் கணித, இயற்பியல், இயற்கையியல் விஞ்ஞானியும் மார்க்க அறிஞருமான அபு ரைஹான் முஹம்மது பின் அஹமத் அல் புருனி (Abu Rayhan Muhammad ibn Ahmad al-Biruni) தன் நூலில் மேற்கண்ட பராஅத் இரவு பற்றி குறிப்பு எழுதியுள்ளதாக அறிய முடிகிறது.
மேலும் அக்காலத்து அறிஞர் அபு ரைஹான் குறிப்புகளின் படி பழங்காலத்து ஈரானிய ஷியா பிரிவு முஸ்லிம்கள் தங்கள் இறந்த மூதாதையர்களை நினைவு கொள்ளும் பொருட்டு அவர்களின் சமாதிகளுக்கு (கப்ருஸ்தான்) சென்று அங்கு Peganum harmala என்ற அவர்களின் புனிதான மலரை தூவி மண்ணரையின் நான்கு புறங்களிலும் தீபம் ஏற்றி அதில் உருவாகும் நெருப்பு ஜுவாலையின் மீது உப்பு தூவி விடுவா்களாம் அப்படி நெருப்பின் மீது உப்பினை தூவும் போது அந்த நெருப்பு சுடா் விட்டு எரியுமாம் அதுசமயம் கசப்பான ஹா்மலா மலரின் சுவையும் உப்பின் உவா்ப்பும் சேர்ந்து தங்கள் எதிரிகளின் திருஷ்டி கலைந்து அவர்களின் கண்களை குருடாக்கட்டுமாக என்ற கவிதை வரிகளை பாடுவார்களாம் (“The Peganum harmala is bitter and salt is salty so the jealous eye of the enemy be blind.”)
காலப்போக்கில் இந்த முரட்டு கவிதை வரிகள் மாற்றப்பட்டு இன்று இந்தியா தமிழகம் முழுவதும் யா! நபி ஸலாம் அலைக்க யா! ரசூல் ஸலாம் அலைக்க! பாடல்கள் பிரபலமாகி பாரசீக மொழியிலிருந்து பிறந்த உருது மொழியில் நாத் பாடல்கள் கஸிதே எனும் கவிதை வரிகளாயின.
ஷபே பராஅத்தும் கிருஸ்தவர்களும்!
ஷியா முஸ்லிம்களைப் போன்றே கிருஸ்தவ மதத்திலும் சமாதிகளை வழிபடும் புதுமையான பண்டிகை தோன்றியது அதற்கு பெயா்தான் கல்லறைத் திருவிழா திருப்பலி. கிருஸ்தவர்கள் தங்கள் இறந்த முன்னோர்களை நினைவுகூா்ந்து அவர்களின் கல்லரைகளுக்கு சென்று மலா்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனைகளை செய்வார்கள்.
ஷபே பராஅத்திற்கு பல நாடுகள் முட்டு கொடுக்கின்றனா்
துருக்கி ஓட்டோமன் எனப்படும் உஸ்மானிய பேரரசின் மன்னர்களில் ஒருவரான சுல்தான் சலீம் II என்பவரால் பராஅத் இரவை பாராத் கண்டிலி என்று பெயா்வைத்து எண்ணெயினால் ஆன தீபங்களை மண்ணரைகளில அலங்கரித்து கொண்டாட வழி வகுத்தார்.
இந்தியாவில் தாருல் உலூம் தேவ்பந்திகளால் இந்த பண்டிகை நாளில் பள்ளிவாசல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப் படுகிறது.
பாகிஸ்தானில் வீடுகள், தெருக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு Mahafil E Nath கவிதைள் பாடி மண்ணரை இரவு வணக்கம் வழிபடப்படுகிறது.
ஈரான் மற்றும் ஈராக் (குர்திஸ் மக்கள்) மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இரவு முழுவதும் திக்ருகள் ஓதி பராஅத் இரவு கொண்டாடப்படுகிறது.
ஷபே பராஅத் இரவுக்காக முட்டுக் கொடுக்கும் ஈரானிய ஷியாக்கள்
ஈரானிய ஷியா பிரிவுகளில் மிகப் பெரிய அமைப்பு இமாமியா ஆகும் இந்த அமைப்பு ஏகத்துவத்தை மட்டும் பின்பற்றும் ஷியா அமைப்பாகும் (ஈரானிய ஏகத்துவ ஷியா எனும் இமாமியா அமைப்பை பற்றி இன்னொரு கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன்). இந்த அமைப்பின் தலைவர்கள் 12 இமாம்களாவர் அவா்களின் பெயர்களாவன
- அலி இப்னு அபிதாலிப் (ரலி)
- ஹசன் இப்னு அலி (ரலி)
- ஹுசைன் இப்னு அலி (ரலி)
- அலி இப்னு ஹுசைன் (ரலி)
- முஹம்மது அல் பாகிர் (ரஹ்)
- ஜாஃபர் அல் சாதிக் (ரஹ்)
- மூஸா அல் காதிம் (ரஹ்)
- அலி அல் ரிதா (ரஹ்)
- முஹம்மது அல் தாகி (ரஹ்)
- அலி அல் ஹாதி (ரஹ்)
- ஹசன் அல் அஸ்கரி (ரஹ்)
- முஹம்மது அல் மஹதி (அலை)
இவர்களில் இறுதியான இமாம்தான் முஹம்மது அல் மஹதி என்பவராவார் இவர் வேறு யாருமில்லை கியாம நாளுக்கு முன் வருவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்ட இமாம் மஹதி (அலை) ஆவார்கள்.
இந்த இமாமியா எனும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் இமாம் மஹதி (அலை) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த ஷபே பராஅத் விழாவினை கொண்டாடுகிறார்கள்.
அவர்களின் கருத்துப்படி தங்களது 12வதும் இறுதியுமான இமாம் மஹதி (அலை) அவர்கள் ஏற்கனவே பிறந்துவிட்டதாகவும் அவர் மக்களின் பார்வையிலிருந்து ஈஸா (அலை) போன்று மறைக்கப்பட்டுவிட்டார் எனவும் அவர் உயிருடன் உள்ளார் என்றும் இறுதிகாலத்தில் தோன்றுவார் எனவும் கருதுகிறார்கள்.
எனவே இவரது பிறந்த நாளை மீலாத் விழாவாக இந்த ஈரானிய ஷியா அமைப்பான இமாமியா அமைப்பு ஷபே பராஅத் இரவுக்கு முட்டு கொடுத்து கொண்டாடி வருகின்றனா்.
பராஅத் இரவு அல்லாஹ்வை இழிவுபடுத்தும் செயல்
உலகில் பிறந்த அத்தனை ஆண்களும், பெண்களும் கடந்த காலங்களில் செய்த நல்ல அமல்களை (நற்செயல்களை)க் கொண்டு வருங்கால ஆண்டுக்குரிய விதியை ஏக இறைவன் அல்லாஹ் ஷபே பராஅத் இரவில் மாற்றி எழுதுவதாக எழுதி வைத்துக் கொண்டுள்ளார்கள். அதாவது அல்லாஹ் சொல்லாத ஒன்றை இவர்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி அல்லாஹ்வுக்கே தாம் என்ன வேலையை செய்ய வேண்டும் என்று கற்றுத் தருகிறார்கள். (நவுதுபில்லாஹ்)
விதியை பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுவது என்ன? சிந்திப்போமா?
அல்லாஹ் விதியை பற்றி மக்களுக்கு அறிவிக்கும் போது மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே விதியை படைத்துவிட்டதாகவும் அந்த விதியின் அடிப்படையிலேயே மனிதன் உலகில் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாவும் அவைகள் லவ்ஹுல் மஹ்ஃபுள் எனும் ஏட்டில் பதிவிட்டுள்ளதாகவும் வர்ணிக்கிறான்.
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۚۖ (57:22 : Al Quran)
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் – அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். (குர்ஆன் 57:22)
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ(64:11 Al Qur’an )
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் – அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (குர்ஆன் 64:11)
ஒவ்வொரு மனிதனும் அவன் தாம் செய்த பாவங்களை எண்ணி வருந்தி மனம் திருந்து ஏக இறைவன் மீதும் மறுமை மீதும் அச்சம் கொண்டு ஈமான் எனும் இறை நம்பிக்கை கொள்ளும் போது அல்லாஹ் அவனுக்கு நேர்வழியில் செலுத்துவதாக கூறுகிறான்.
பராஅத் இரவில் பாவங்கள் மன்னிக்கப்படுமா?
பராஅத் இரவில் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பதாக எந்த அடிப்படை ஆதாரங்களும் அறிவிக்காத நிலையில் மனிதனாக பிறந்த ஒருவன் பராஅத் இரவில் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக கூறுவது அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டும் மிகப் பெரிய பாவமான காரியமாகும். பராஅத் இரவே கட்டுக்கதையும் பாவமான காரியமாக இருக்கும் போது மன்னிப்பு என்பது கிடைக்குமா? சிந்திக்க வேண்டாமா? உதாரணமாக
ஒவ்வொரு அரசாங்கமும் அநியாய கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்று சட்டம் இயற்றிய பின்னர் இந்த சட்டத்தை அறிந்த ஒருவன் அநியாயமாக ஒருவனை கொலை செய்துவிட்டு இப்போது அரசாங்கம் என்னை மன்னித்துவிடும் என்று கூறுவது எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனமாகிறது இந்த பராஅத் இரவின் பாவ மன்னிப்பு என்கிற வாதமாகும்.
உலகில் விதி எப்பொழுது எழுதப்படுகிறது – நபிமொழி
صحيح البخاري رقم فتح الباري (4/ 111)
3208 – حَدَّثَنَا الحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ، قَالَ: ” إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ: اكْتُبْ عَمَلَهُ، وَرِزْقَهُ، وَأَجَلَهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ “
ஒருவரின் படைப்பு அவரது தாய் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
பின்னர் அவ்வாறே (நாற்பது நாட்களில்) கருக்கட்டியாக மாறுகிறது.
பின்னர் அவ்வாறே (நாற்பது நாட்களில்) சதைக் கட்டியாக மாறுகிறது.
பின்னர் ஒரு வானவரை அல்லாஹ் அனுப்பி
“இவரது செயல்பாடுகளைப் பதிவு செய்!
இவரது செல்வத்தைப் பதிவு செய்!
இவரது மரண வேளையைப் பதிவு செய்!
இவர் நல்லவரா கெட்டவரா என்பதைப் பதிவு செய்!”
என நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. பின்னர் அவருக்கு உயிர் ஊதப்படுகிறது. உங்களில் ஒரு மனிதனுக்கும் சொர்க்கத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர் (நல்ல) செயல்களைச் செய்வார்.
முடிவில் விதி அவரை வென்று நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். உங்களில் ஒரு மனிதனுக்கும் நரகத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர் (கெட்ட) செயல்களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து விடுவார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 3208 , 3332, 6594, 7454
صحيح البخاري رقم فتح الباري (4/ 158)
3409 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” احْتَجَّ آدَمُ وَمُوسَى، فَقَالَ لَهُ مُوسَى: أَنْتَ آدَمُ الَّذِي أَخْرَجَتْكَ خَطِيئَتُكَ مِنَ الجَنَّةِ، فَقَالَ لَهُ آدَمُ: أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالاَتِهِ وَبِكَلاَمِهِ، ثُمَّ تَلُومُنِي عَلَى أَمْرٍ قُدِّرَ عَلَيَّ قَبْلَ أَنْ أُخْلَقَ ” فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَحَجَّ آدَمُ مُوسَى مَرَّتَيْنِ»
ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள்.
மூஸா (அலை) அவர்கள், ஆதம் (அலை) அவர்களிடம்
“ஆதமே எங்கள் தந்தையான நீங்கள் எங்களை இழப்பிற்குள்ளாக்கி சுவனத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்களே?” என்றார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள்
“மூஸாவே அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான். அவன் தனது கரத்தால் (தவ்ராத் என்ற வேதத்தை) உமக்காக எழுதிக் கொடுத்தானா என்று கேட்டார்கள்.
அதற்கு மூஸா (அலை) அவர்கள் ஆம் என்றனர். என்னைப் படைப்பதற்கு முன்னரே இது (தவ்ராத்தில்) எழுதப்பட்டதை நீர் பார்த்ததுண்டா? எனக் கேட்டார்கள்.
அதற்கு மூஸா (அலை) ஆம் என்றனர். எனவே மூஸாவை ஆதம் வென்று விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 3409, 4736, 4738, 7515
எல்லாம் எழுதப்படட விதிப்படியே நடக்கும் என்பதற்கு சான்று
அபூலஹப் வாழ்ந்த காலத்திலேயே அல்லாஹ் அவன் நேர்வழி பெறமாட்டான் என்று குர்ஆனில் கூறிவிட்டான் இதை அறிந்த அபூலஹப் அல்லாஹ்வையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் பொய் என்று நிறூபிக்க முடியும் என்றாலும் அவனால் நடிக்கவும் முடியாத இழிநிலை அவனுக்கு ஏற்பட்டு காஃபிராகவே மரணித்தான்.
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). (குர்ஆன் 111: 1முதல் 5வரை)
மேற்கண்ட குர்ஆன் வசனம் ஒருவனின் விதியை அது லவ்ஹுல் மஹ்ஃபுள் எனும் ஏட்டில் எழுதப்பட்டதன் படியே நடக்கும் என்பதற்கு 100 சதவீத ஆதாரமாக திகழ்கிறது மீண்டும் அந்த வசனத்தை கீழே குறிப்பிட்டுள்ளோம் சிந்தித்து படிக்கவும்.
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۚۖ (57:22 : Al Qur’an)
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் – அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். (குர்ஆன் 57:22)
முடிவுரை
அன்பிற்கினிய என் சகோதர சகோதரிகளே! உங்களை இழிவுபடுத்துவது எமது பணியல்ல அது முறையுமல்ல மாறாக நீங்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்களும் காட்டித்தராத அல்லாஹ் வெறுக்கின்ற செயல்களில் முன்னோர்கள் மற்றும் மூதாதையர்கள் பின்பற்றிய காட்டித்தந்த வழிமுறையைத்தான் நீங்கள் மார்க்கம் என்று கருதுகிறீர்கள். இதைத்தான் நபிகளாரின் முன்னோர்கள் செய்து வந்தனா்.
நபிகளார் (ஸல்) எவ்வாறு தன் பாட்டனார் அப்துல் முத்தலிஃப் மற்றும் அவரது குறைஷி கோத்திரத்தார் கடைபிடித்த வழிமுறைகளை பின்பற்றாமல் வஹி மூலம் அல்லாஹ் கற்றுத்தந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றினார்களோ அது போன்றே நீங்களும் உண்மையான தீனாகிய இஸ்லாத்தின் கயிற்றை பற்றிப் பிடிக்க அழைப்பு விடுக்கிறோம்.
நீங்கள் இக் கட்டுரையை முழுவதுமாக படித்திருப்பின் ஷபே பராஅத் பற்றிய உண்மையை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே எங்கள் பணி உங்களை நேர்வழி எது என்பதை காட்டுவதுதான் நீங்கள் திருந்தி அல்லாஹ்வுக்கு அடிபணிந்து இஸ்லாம் காட்டித்தராத மாற்றுமத கலாச்சாரத்தை புறக்கணித்தால் அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னித்து சுவனத்தை பரிசளிக்க போதுமானவன்.
மாறாக உங்கள் மூதாதையர் மற்றும் முன்னோர்கள் காட்டித்தந்த ஷிர்க் மற்றும் பித்அத்தான அநாச்சாரங்களின் மீதுள்ள காதல், மோகத்தை வெறுக்க இயலாது என நம்பினால் வழிகெட்டு போவது நீங்கள்தான் என்பதே எங்களது கருத்தாகும் ஆகையால் உங்களுக்கு விதிக்கப்பட்ட விதியை எம்மால் மாற்ற இயலாது என்பதை மட்டும் எங்களுக்கு கூற உரிமையுள்ளது.
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456)
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட போதுமானவன். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!
ஆண்டுகள் கழித்து மீண்டும் கட்டுரை வரைய நேரமும், அறிவும், அழகிய நடைமுறையையும் அருளிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்
அன்புடன்
சிராஜ்அப்துல்லாஹ்
You must be logged in to post a comment.