குர்ஆனும் பூச்சியியலும்

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

குர்ஆனும் பூச்சியியலும்

(குர்ஆன் கூறும் ”ஈ” பற்றிய விஞ்ஞானம்!)

 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிகழட்டுமாக!

யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. (குர்ஆன் 50:37)

பூச்சியியல்  என்றால் என்ன?

அறிவியல் பற்றி படித்த நாம் பூச்சியியல் பற்றி படித்திருக்கிறோமா? அல்லது அறிந்துத்தான் வைத்துள்ளோமா? நம்மில் பலர் பூச்சியியல் என்பதை இன்றுத்தான் கேட்டிருப்போம்! ஆம் பூச்சியியல் என்ற அறிவியல் பூச்சிகளைப் பற்றி ஆராயும் படிப்பறிவியலாகும் இதற்கு ஆங்கிலத்தில் என்டாமாலஜி (Entomology) என்று கூறுவர்.

ent

16ம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த பூச்சியியல் இதுவரை உலகில் சுமார் 1.3 மில்லியன் பூச்சி இனங்கள் உள்ளதாக கூறுகிறது. ஆனால் அருள்மறை குர்ஆன் இந்த பூச்சியியலைப் பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன் அதை தெளிவாக விவரித்து உள்ளது வியப்பளிக்கிறது. அப்படி அருள்மறை குர்ஆன் என்னத்தான் கூறுகிறது இது உண்மையா என்பதை நாம் இந்த ஈ என்ற பூச்சியைக் கொண்டு அறியலாம். இதோ அழகிய அறிவுரையுடன் கூடிய ஈ என்ற பூச்சியை மையமாக வைத்து ஒரு சிந்தனை!

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாதுஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (குர்ஆன் 22:73)

மேற்கண்ட வசனத்தில் அப்படி என்னத்தான் விஞ்ஞானம் கொட்டிக் கிடைக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனமாகும் காரணம் இறைவன் அடிக்கடி குர்ஆனை சிந்தியுங்கள் என்று அறிவிப்பு செய்கிறான் எனவே சிந்திக்காத மனிதன் எவ்வாறு அறிவாளியாக இயலும் இதோ சிந்திக்கக்கூடிய வரிகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

  • அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர்ஈயைக் கூட படைக்க முடியாது

 

  • ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது

இந்த ஒரு வசனத்தில் 2 வகையான கேள்விகள் அடங்கியுள்ளன. முதல் கேள்வியில் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது அப்படியானால் நம் பார்வையில் காணப்படும் சாதாரண அந்த ஈ எப்படிப்பட்ட படைப்பு சிந்திக்க வேண்டாமா? அந்த ஈ என்ற படைப்பின் கட்டமைப்பை நாம் சிந்திக்க வேண்டாமா? வாருங்கள் ஈயின் படைப்பை பற்றி ஆராய்ச்சி செய்வோம்!

கேள்வி – 1

அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது (குர்ஆன் 22:73)

ஈக்கள் என்றால் என்ன?

ஈக்கள் என்பது பூச்சியியல் துறையில் தலைசிறந்த பூச்சி இனமாகும். பட்டி தொட்டி எங்கும் பரவி பாரீஸ் போன்ற தூய்மையான நகரம் வரை நுழைந்து மக்களை துன்புறுத்தும் ஓர் பூச்சியினம்தான் ஈ. மனிதனின் உடலில் பலவகை நோய்களை உருவாக்கி மனிதனை மரணிக்கச் செய்யும் திறமையும் இந்த ஈக்களுக்கு உண்டு எனவேதான் ஈக்கள் என்றாலே சிலருக்கு ஒவ்வாமை எனும் அலர்ஜி ஏற்படுகிறது.e-1

சராசரி வயதை அடையும் ஈக்கள் சுமார் 4 முதல் 8mm காணப்படுகிறது. இதில் இனப்பெருக்கத்தை அடையும் ஈக்கள் 6.35 mm நீளமும் .012 கிராம் எடையும் இருக்கின்றன. இவைகளின் இறக்கைகளின் நீளம் 13 முதல் 15 mm காணப்படுகிறது. அதாவது உடலைவிட இறக்கைகளின் நீளம் இருமடங்கு அதிகமாக இருப்பதால் அவைகளால் தன் உடலை மிகவும் இலகுவாக கொண்டு பறக்க இயலுகிறது. (சுபுஹானல்லாஹ்)

ஈக்களின் உடல் அமைப்பு

ஈக்களின் உடல் அமைப்பு 3 பாகங்களாக அமைந்துள்ளது.

  • தலை
  • மார்பு பகுதி
  • வயிற்றுப் பகுதி

normal fly anatamy

மார்ப்பு மற்றும் வயிற்றுப்பகுதியை இணைத்தவாறு இறக்கைகளும் ஆறு கால்களும் அமைந்துள்ளன. மேலும் இதன் இறக்கைகள் கண்ணாடி இழைகளைப் போன்று காணப்படுவதால் ஒளி புகும் தன்மையை கொண்டுள்ளது ஆச்சரியப்படவைக்கிறது! (அல்லாஹூ அக்பர்)

ஈக்களின் பாலினம்

ஈக்களில் ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் காணப்படுகிறது இதை குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது! இதோ குர்ஆன் வசனம்

நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம். (குர்ஆன் 51:49)

h6

இந்த ஈக்களின் பாலினத்தில் ஆண் ஈக்கள் பெண் ஈக்கள் என்ற இரண்டு ஜோடிகள் இருக்கின்றன. இதிலும் ஒரு வேடிக்கை என்னவெனில் ஆண் ஈக்களை விட பெண் ஈக்கள் சற்று தடிமனாக குண்டாக காணப்படுகிறது. மேலும் பெண் ஈக்களை விட நீள வாக்கில் ஆண் ஈக்கள் குட்டையாக காணப்படுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் ஈக்களின் கண்களைப் பொருத்தவரை பெண் ஈக்களின் கண்கள் ஆண் ஈக்களின் கண்களைவிட சற்று பருமனாக காணப்படுகிறது இங்கும் மனிதர்களைப் போன்றே பெண் ஈக்கள் தான் ஆண்களைவிட சற்று கூடுதல் அங்க அமைப்புகளை பெற்றுள்ளது.

ஈக்களின் கண்கள்!

ஈக்களுக்கு இரண்டு கண்கள் உள்ளன. இந்த கண்களில் பார்வையை உணரக்கூடிய ஆயிரம் பல்வேறு உறுப்புக்களின் கூட்டமைப்பாக திகழ்கிறது இதனால் இந்த ஈக்கள் ஒரு இடத்திலிருந்தவாறே பல்வேறு கோணங்களில் பார்க்கக்கூடிய திறன் பெற்றுள்ளன அதுமட்டுமின்றி மனிதனின் பார்வைக்கு புலப்படாத இராசயண வர்ணங்களின் கலவைகளை உணரக்கூடியதாக ஈக்களின் பார்வை உள்ளது.

housefly eye

ஈக்களின் கண்கள் ஒரு சிறு அசைவு கூட மிக எளிதாக உணரக்கூடிய வகையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஈக்கள் எளிதில் தங்களது இலக்கை மிக இலவகமாக அடைகின்றன. ஈக்களின் இந்த அபார பார்வைத்திறனால் தங்களது எதிரிகளின் அனைத்து அசைவுகளையும் துள்ளியமாக உணர முடிகிறது. எனவேதான் ஒரு ஈ-யை மனிதர்களாகிய நாம் அடிக்க கையை ஓங்கினாலும் அடிக்க முடிவதில்லை இதைத்தான் அல்லாஹ் சுபுஹானவதாலா கீழ்க்கண்டவாது குர்ஆனில் அழகாக கூறுகிறான்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (குர்ஆன் 22:73)

h3

கண்களை பாதுகாப்பதில் இந்த ஈக்களுக்கு நிகராக யாருமில்லை எனலாம் ஏனெனில் இந்த ஈக்கள் தங்கள் பார்வையை துள்ளியமாக வைத்திருக்க எந்தவித அழுக்குகளையும் தன் கண்களில் படாதவண்ணம் பார்த்துக் கொள்கின்றன ஒரு வேளை இந்த ஈக்களின் கண்களில் தூசு போன்ற ஏதாவது தொற்றிக் கொண்டால் அதை நீக்குவதற்கென்றே உள்ள முன்னங்கால்களைக் கொண்டு அதன் தூசு படிந்த கண்களை சுத்தம் செய்துக் கொள்கின்றன.

ஈக்களின் கால்கள் அமைப்பு

ஈக்களுக்கு ஆறு கால்கள் உள்ளன.

  • முன்னங்கால்கள் (இரண்டு)
  • நடுப்பகுதி கால்கள் (இரண்டு)
  • பின்னங்கால்கள் (இரண்டு)

h-5

கால்களின் விஷேச குணங்களைப் பார்க்கும் போது முன்னங்கால்கள் இரண்டும் தன் தலைப்பகுதியில் உள்ள கண்களில் அவ்வப்போது விழும் தூசித்துகள்களை அப்புறப்படுத்துவதற்கு உதவுகிறது.

கால்களில் சுவை நரம்புகள்

ஈக்களின் கால்களில் ஒருவகை செல்கள் அமைப்பு உள்ளது அவை சுவையை உணரக்கூடிய நரம்புகளுடன் தொடர்புடையது.

h7

ஈக்களின் பின்னங்கால்களில் மயிர் இழைகளில் இந்த செல் அமைப்புகள் காணப்படுவதால் அதில் சுவையை உணரும் சுரப்பித் தன்மை உள்ளது. இதனால்தான் இந்த ஈக்கள் உணவுப் பொருட்களின் மீது அமர்ந்து மெதுவாக நடக்க முற்படுகிறது இதற்கான காரணம் இவைகள் அந்த உணவின் சுவையை அறிய முன் பின்னாக அதன் மீது நடந்து செல்வதால் கால்களில் உள்ள சுவையை உணரும் நரம்புகள் அந்த உணவின் அதிக சுவைப்புத் தன்மையை அந்த ஈக்கு உணர்த்துகிறது. (சுபுஹானல்லாஹ்)

ஈக்களின் கால்களில் உள்ள திரவம்!

ஈக்களின் கால்களில் சுவையை உணரும் நரம்புகள் மட்டும் அல்லாமல் ஒருவகை பசை உள்ள திரவமும் சுரக்கிறது இது சுவரில் தலைகீழாக நிற்பதற்கு பயன்படுகிறது எனவேதான் ஒரு மேசையின் மீது தலைகீழாக தொங்கியவாறு நடந்து செல்கின்றன எனவே ஈ கீழே விழுவதில்லை!

ஈக்களின் இறக்கைகள்

ஈக்களின் மார்புப் பகுதியிலிருந்து அதன் இறக்கைகள் முளைத்து விரிகின்றன. பின்பக்கமாக விரிந்து மடங்கக்கூடிய அமைப்பாக இறக்கைகள் காணப்படுகின்றன.

ஈக்களின் இரண்டு இறக்கைகளுக்கும் இடையில் சிறிய இறக்கை போன்ற தோல்பட்டை அமைப்பு உள்ளது. இந்த அமைப்பானது இறக்கைகளை கட்டுப்படுத்தி வேகமாக பறந்து செல்ல உதவுகிறது.

h8

இடது இறக்கைக்கு அருகே ஒரு தோல்பட்டையும் வலது இறக்கைக்கு அருகே ஒரு தோல்பட்டையும் உள்ளது இந்த இரண்டு தோல்பட்டைகளில் ஏதாவது ஒன்று பழுதாகி உதிர்ந்து விழுந்துவிட்டால் ஈக்கள் நேராக பறக்க இயலாது மாறாக வட்டமடித்து வட்டமடித்து மட்டுமே பறக்கும் அதே போன்று இரண்டு தோல்பட்டைகளும் பழுதாகி உதிர்ந்துவிட்டால் இரண்டு இறக்கைகள் இருந்தும் ஈக்களால் பறக்கவே முடியாது

ஈக்களின் உடலும் முடிகளும் ஓர் அதிசயம்!

ஈக்களின் உடல் பல ஆயிரக்கணக்கான முடிகளால் சூழப்பட்டுள்ளது அதனால் அந்த ஈக்கள் தன் கால்களில் பிடித்துக் கொள்ளும் இரையை அந்த ஈக்களின் முடிகளில் காணப்படும் ஈரப்பதமான ஈர்ப்புத் தன்மை அந்த இரையை கீழே விழாமல் இருக்க உதவுகிறது. (சுபுஹானல்லாஹ்)

h-3

இந்த முடிகள் இருப்பதன் காரணமாக ஈக்களின் உடலில் பல்வேறு பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்கின்றன இந்த பாக்டிரியாக்களின் அழுக்குகள் அந்த ஈயின் உடலில் தொற்றிக் கொள்வதை இந்த ஈக்கள் தன்னுடைய கால்களின் உதவியால் அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்கின்றன.

ஈக்கள் ஒரு முறை தனது உடலில் உள்ள அழுக்கை தனது கால்களால் சுத்தப்படுத்தும் போது கால்களிலிருந்து பல இலட்சம் பாக்டீரியாக்கள் சிதறி வெளியேற்றுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கேள்வி – 2

  அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது (குர்ஆன் 22:73)

ஈக்களின் ஆயுட்காலம்

மனிதன் சராசரியாக 60 முதல் 100 வயது வாழக்கூடியவன் ஆனால் ஒரு ஈ அல்லது கொசு சராசரியாக 7 நாட்கள் வரையே வாழும். இப்படிப்பட்ட சூழலில் மனிதனின் காலமும் ஈ காலமும் ஒன்றாகாது! மனிதனின் காலத்தில் ஒரு ஈ பயணிக்க இயலும் ஆனால் ஈயின் காலத்தில் ஒரு மனிதனால் பயணிக்க இயலாது! குழப்பமாக உள்ளதா? இதை நிறூபிக்க இயலும்!

ஈக்களுக்குச் சில அசாத்திய சக்திகள் இருகின்றன. அவற்றில் ஒன்று ஈக்களின் கண்கள். இவற்றுக்கு ‘மைக்ரோஸ்கோப்’ பார்வை உண்டு.

h-eye

மனிதர்களின் கண்களைவிடப் பத்து மடங்கு அதிக வேகம் கொண்ட ‘ரிஃப்லெக்ஸ்’ ஈக்களின் கண்களில் உள்ளன எனவே ஒரு ஈ நம் தோலில் அமர்ந்து விட்டால் அந்த ஈயை அடிக்க நாம் கையை உயர்த்துகிறோம் ஆனால் நம்மால் அதை விரட்ட முடியுமே தவிர அடிக்க முடிவதில்லை காரணம் ஈயின் வேகம் நம்முடைய வேகத்தைவிட பண்மடங்கு வேகமாக உள்ளது. நாம் கையை உயர்த்தும் அசைவுகளை அந்த ஈ உணர்ந்து விரைவாக நம்மை விட்டு விலகிச் சென்றுவிடுகிறது இங்கு மனிதனின் காலத்தில் (TIME) ஒரு ஈயினால் பயணிக்க முடிகிறது ஆனால் ஈயின் காலத்தில் ஒரு மனிதனால் பயணிக்க இயலாது!

ஒரு கொசு அல்லது ஈயின் ஆயுட்காலம் நம் பார்வையில் 7 நாட்கள்தான் ஆனால் அந்த கொசு அல்லது ஈயின் பார்வையில் அதன் வேகத்தின் அடிப்படையில் அவை குறைந்த பட்சம் 100 வருடங்கள் அல்லது அதற்கு மேல் வாழலாம் இதுவே காலப் பயணம் (TIME JOURNEY) என்கிறோம்.

(முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது. (குர்ஆன் 22:47)

எனவே சாதாரண ஒரு ஈயின் வேகத்தைக் கூட மனிதனால் கடக்க இயலாது இது சாத்தியம் எனில் ஜின்கள் மனிதனின் வேகத்தைவிட பண்மடங்கு வேகமாக காணப்படுவதில் என்ன ஆச்சரியம் உள்ளது ஆக ஜின்களுக்கு அசாத்திய ஆற்றல் இருப்பது உண்மையானால் ஈக்களுக்கும் அசாத்திய ஆற்றலை இறைவன் கொடுத்துள்ளான் எனவே இறைவனின் ஒவ்வொரு படைப்பின் மீதும் தன் கூர்மையான அறிவை அழகை செலுத்தியுள்ளான் என்பதாக உணர வேண்டும். (சுபுஹானல்லாஹ்)

கொசு மற்றும் ஈக்களுக்கு வழங்கிய வேகத்தை விட பன்மடங்கு வேகத்தை ஜின்களுக்கு இறைவன் வழங்கியுள்ளான் அதே நேரத்தில் மனிதனுக்கு மூளையை வழங்கியுள்ளான் எனவேதான் மனிதனை இறைவன் குர்ஆனில் அடிக்கடி சிந்திக்க தூண்டுகிறான். இனிமேலாவது குர்ஆனை சிந்தித்து உணர்ந்து படிப்போமா?

இனி ஏதாவது ஒரு ஈ உங்கள் கண்களில் தென்பட்டால் இக்கட்டுரை உங்களுக்கு நினைவுக்க வரவேண்டும் மேலும் கீழ்க்கண்ட குர்ஆன் வசனம் உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்க வேண்டும் என்பதே என் பேரவா!

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (குர்ஆன் 22:73)

முடிவுரை

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாரிடம் உதவி தேடினாலும் (கல்லை, மரத்தை, மின்னல் மேகத்தை, கப்ருகளை, ஜின்களை மற்றும் அல்லாஹ் படைத்த வஸ்துக்களை) வணங்கினாலும் அவர்கள் உங்களுக்கு உதவமாட்டார்கள் அவர்களிடம் உதவி தேடுவதும் ஒன்றுதான் தோடாமல் இருப்பதும் ஒன்றுதான் எனவே உங்கள் அனைவரையும் படைத்த நாயன் அல்லாஹ் சுபுஹானவதாலாவை வணங்கி அவனிடமே சரணடைவோமாக!

தவ்ஹீத் என்னும் ஏக இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வாழ்க்கை நெறிமுறைகயை பேணி நம் ரூஹ் என்னும் ஆத்மாவை அல்லாஹ்வின் சந்நிதானாத்தில் சமர்ப்பிப்போமாக!

இறைவாகட்டுரையை படிக்கும் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவாயாக!

என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! (குர்ஆன் 26:83-85)

 

 அல்லாஹு அக்பர்!

(அவன் மிகப் பெரியவன்)

அன்புடன்

சிராஜ் அப்துல்லாஹ்

குறிப்பு

என்னில் தவறு நேர்ந்திருப்பின் தெளிவான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் மூலம் தெரியப்படுத்தவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறோம்!

ஸலாம்!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.